அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை 10 பேருந்துகளில் இருந்த காற்று ஒலிப்பான்கள் வட்டார போக்குவரத்து துறையினரால் அகற்றப்பட்டது.
வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர் ஜயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், 10 பேருந்துகளில் இருந்த காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ஜயங்கொண்டம் பகுதியில் அதிக பாரம் ஏற்றி வந்த 2 கனரக வாகனங்களுக்கு தண்ட அறிக்கை வழங்கினர். தகுதிச்சான்று இன்றி இயங்கி வந்த ஒரு தனியார் கல்லூரியின் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
சாலை விதிகள் மீறி வாகனங்களை இயக்கிவந்தவர்களிடம் இருந்து ரூ.32 ஆயிரம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. வாகனத் தணிக்கை தொடர்ந்து நடைபெறும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.