அரியலூரில் பல ஆண்டுகளாக வசித்து வரும் தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மக்கள் குறைகேட்பு நாளில் நரிக்குறவர்கள் மனு அளித்தனர்.
அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் ஆட்சியர் மு. விஜயலட்சுமியிடம் அவர்கள் அளித்த மனு;
அரியலூர் குறிஞ்சான்குட்டை பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவக் குடும்பங்களைச் சேர்ந்த நாங்கள் வசித்து வருகிறோம். மழைக் காலங்களில் வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்குவதால் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. வடிகால் வசதி இல்லாததால் நாள்கணக்கில் தண்ணீர் தேங்கி நிற்கின்றன. எனவே, மாற்று இடத்தில் இலவச வீட்டு மனைபட்டா வழங்க வேண்டும்.
மகனை மீட்டுத் தர வேண்டும் : அரியலூர் மாவட்டம், தத்தனூர் குடிக்காட்டை சேர்ந்த பிச்சைப்பிள்ளை அளித்த மனு: எனது மகன் இளங்கோவன்(23) இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தத் தொழிலாளியாக சிங்கப்பூருக்கு சென்றார். வெளிநாடு சென்ற ஒருசில மாதங்கள் மட்டுமே தொடர்பில் இருந்தார். அதன் பிறகு இதுவரை எங்கு, எப்படி உள்ளார் என்ற விவரம் கிடைக்கவில்லை. எனவே, எனது மகனை மீட்டுத்தர வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.