அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பூமுடையான் கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் க. லட்சுமிபிரியாவிடம் அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
அவர்கள் அளித்த மனு: பூமுடையான் கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவிகள் அவ்வழியே நடந்து செல்லமுடியவில்லை. மது அருந்த வருபவர்கள், பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதால் அவ்வழியே செல்ல முடியாமல் அச்சத்தில் உள்ளனர். மேலும் இங்குள்ள இளைஞர்கள், மாணவர்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி வருவதால் உடனடியாக இந்த டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.