ஜயங்கொண்டம் அருகே குடிநீர் கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே வாரியங்காவல் கிராமம் வடக்கு காலனித் தெருவில் சில ஆண்டுக்கு முன்பு போடப்பட்ட போர்வெல் அண்மையில் பழுதானது. இதனால் மக்கள் குடிநீருக்கு சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஜயங்கொண்டம் -அரியலு-வாரியங்காவல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன், ஜயங்கொண்டம் போலீஸார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். புதிதாக போர்வெல் அமைத்து தரப்படும் எனவும், அதுவரை சின்டெக்ஸ் டேங்க் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.