அரியலூர் மாவட்டம் செந்துறையில் பூட்டியிருந்த வீட்டில் நகைகள் ஞாயிற்றுக்கிழமை திருடப்பட்டிருந்த நிலையில் போலீஸாருக்கு தகவல் கொடுத்தும் வராததால் அப்பகுதியில் வசிப்போர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செந்துறை அமிர்தம் நகரைச் சேர்ந்தவர் கலையரசன்(42). இவர் தனியார் சிமென்ட் ஆலையில் வேலை செய்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம்போல் வேலைக்குச் சென்று விட்டார். தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரது மனைவி மகனுடன் திருச்சி சென்று விட்டார்.
வீட்டில் இருந்த அவரது பெரிய மகள், வீட்டை பூட்டிவிட்டு அருகேயுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டார். சிறிதுநேரம் கழித்து தனது பாட்டியுடன் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பின்பக்கக் கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியைடந்தார். உள்ளே சென்று பார்த்ததில், பீரோவில் இருந்த 6 பவுன் நகை திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து செந்துறை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீஸார் வரவில்லை எனக்கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் செந்துறை - உடையார்பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த செந்துறை போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.