அரியலூர் அருகே ரூ. 500 லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
அரியலூர் அருகே உள்ள பொய்யாதநல்லூர், காலனித்தெருவைச் சேர்ந்த ஆணைமுத்து மகன் அண்ணாதுரை (60). இவர், கடந்த 2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது மகள் விஜயலட்சுமி திருமணத்திற்காக உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
அதற்கு கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ் தேவைப்பட்டதால், அப்போதைய இலுப்பையூர் கிராம நிர்வாக அலுவலராக இருந்த தாமரைக்குளம் ராமசாமியை சந்தித்து சான்றிதழ் கேட்டுள்ளார். அதற்கு அவர் ரூ.500 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத அண்ணாத்துரை, இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீஸார் அறிவுரையின் படி, ரசாயனம் தடவிய பணத்தை ராமசாமியிடம், அண்ணாத்துரை கடந்த 14.10.2004 அன்று கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார், ராமசாமியைக் கையும் களவுமாகக் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை அரியலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கின் விசாரணை முடிவடைந்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, குற்றம் சாட்டப்பட்ட ராமசாமிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து ராமசாமி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.