அரியலூர் மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலைய விடுதி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 680 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலம் மற்றும் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், தனியார் துறைகள் சார்பில் நடைபெற்ற இம்முகாமில் 38 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, 1,921 பேருக்கு நேர்காணல் நடத்தி 680 பேரைத் தேர்வு செய்தனர்.
முகாமுக்கு, ஆட்சியர் மு. விஜயலட்சுமி தலைமை வகித்து, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கிப் பேசியது: இந்த வேலைவாய்ப்பு முகாம் மூலம் படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படுகிறது. குறிப்பாக, வேலைவாய்ப்பற்ற பெண்கள் அனைவரும் வேலைவாய்ப்புகளைத் தேடிச்செல்வதில் அவர்களுக்கு மிக சிரமமாக இருந்தது. அவர்கள் இருக்கும் இடங்களிலேயே அவர்களின் கல்வி, திறமைகளுக்கேற்ப இம்முகாம் மூலம் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. எனவே, இம்மாதிரி வேலைவாய்ப்பு முகாம்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் லலிதா, அரியலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ஏ.ராதாகிருஷ்ணன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சுந்தரவள்ளி அனைவரையும் வரவேற்றார். முடிவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் முனியாண்டி நன்றி தெரிவித்தார்.