அரியலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை, ரூ. 90 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கம் எதிரே லட்சுமி தியேட்டர் பின்புறம் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பாண்டியன். வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி குமுதா தனது குழந்தைகளுடன் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். செவ்வாய்க்கிழமை இரவு இவர், தனது குழந்தைகளுடன் செந்துறை சாலையில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
புதன்கிழமை காலை அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் சரவணன் வந்து பார்த்த போது குமுதாவின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு குமுதாவுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது, பீரோவில் இருந்த 9 பவுன் நகைகள்,ரூ.90 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருப்பது தெரியவந்தது. புகாரின் பேரில் அரியலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.