அரியலூர் - பெரம்பலூர் சாலையில் உள்ள அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயிலில் சூரசம்ஹார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கடந்த 8-ஆம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 5.30 மணிக்கு கிரிவலம், 7.30 மணிக்கு தீபாராதனை, 8 மணிக்கு பஜனை, 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை கந்தபுராண தொடர் விரிவுரை, 12.30 மணி முதல் மாலை 2 மணி வரை நாதஸ்வர கச்சேரி ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
மாலை 4 மணிக்கு சுவாமி சூரசம்ஹாரத்துக்கு ஆட்டு கிடா வாகனத்தில் எழுந்தருளி வந்த முருகப்பெருமான், கஜமுக சூரன், ஆடுதலைசூரன், சிங்கமுக சூரன், தரகா சூரன், பத்ம சூரன், மயூரா சூரன், சூர பத்மன் என ஏழு உருவங்களைத் தாங்கி வந்த சூரனை மாலை 6.15 மணிக்கு சூரசம்ஹாரம் செய்தார்.
தொடர்ந்து, 6.30 மணிக்கு அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு புஷ்பாபிஷேகம், 8 மணிக்கு தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு சுவாமி மயில் வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.