அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள சின்னபட்டக்காடு கிராமத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை விரிவாக்கச் சீரமைப்புத் திட்டத்தின் கீழ் கூட்டுப் பண்ணையம் குறித்த பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
வேளாண் அலுவலர் பால்ஜான்சன் பங்கேற்று, கூட்டுப் பண்ணையத் திட்டத்தின் நோக்கம், செயல்பாடுகள் அதன் பயன்கள் குறித்து விளக்கினர். வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் கலைமதி, விவசாய ஆர்வலர் குழுக்களின் குழுப்பதிவேடுகள் மற்றும் பராமரிப்பு, அரசு மானியத் திட்ட விவரங்கள் குறித்து பேசினர். வேளாண் உதவி அலுவலர் ஜெய்சங்கர், பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் மூலம் சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்யும் முறைகள் மற்றும் பயிர் காப்பீட்டின் அவசியம் குறித்து விளக்கினர். ஏற்பாடுகளை பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர் சதிஷ்குமார் செய்தார்.