அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே சத்துணவு மையங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பல லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் மீது பெண்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜயங்கொண்டம் அருகே வேலாயுதநகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி ஜெயந்தி(47). ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராகப் பணிபுரிந்து வரும் இவர், செங்குந்தபுரம், கீழகுடியிருப்பு, சோழங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் கூலி வேலை
செய்து வரும் பெண்களிடம், சத்துணவு மையங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.3 லட்சம் வரை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
பணத்தை கொடுத்து ஏமாந்த பெண்கள் சிலர், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அவர் உத்தரவிட்டதையடுத்து, ஜயங்கொண்டம் போலீஸார் வெள்ளிக்கிழமை விசாரணையை தொடங்கியுள்ளனர்.