தமிழக தோட்டக் கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை வாயிலாக நுண்ணீர்ப் பாசனம் அமைப்பது தொடர்பான தொழல்நுட்பப் பயிற்சியில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
நுண்ணீர் பாசன அமைப்பைத் தொடர்ந்து பராமரிப்பது தொடர்பான தொழில்நுட்பங்கள் குறித்தும் இப்பயிற்சியில் அளிக்கப்படும். பயிற்சி முடித்த நபர்கள் நுண்ணீர் பாசன நிறுவனங்கள், விவசாயிகள் ஆர்வலர் குழு உற்பத்தியாளர் குழு, உற்பத்தியாளர் நிறுவனங்களில் இப்பொருள் தொடர்பான பணிகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தொழிற்பயிற்சி முடித்தவர்கள் (ஐடிஐ) தோட்டக்கலை வேளாண்மை பட்டயம், சிவில் மற்றும் இயந்திரவியல் பட்டயப் படிப்பு படித்த ஆர்வமுள்ள 16 முதல் 40 வயது வரை உள்ள அனைவரும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். பயிற்சி காலம் ஒரு வாரம். மாவட்ட தலைநகரங்களில் பயிற்சி நடைபெறும். பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் சுய விவரங்களுடன் படிவத்தில் பூர்த்தி செய்து, தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை, வேளாண் வளாகம், சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அரியலூர் மாவட்ட தோட்டக் கலை துறை துணை இயக்குநர் பி.அன்புராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.