காவல்துறை பாதுகாப்புடன் திருவிழா நடத்த அனுமதியளிக்கக் கோரி குறைதீர் கூட்டத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அழகாபுரம் முத்துமாரியம்மன் கோவில் தெரு மக்கள் அளித்த மனு: ஊரிலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் கடந்தாண்டு திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறையடுத்து திருவிழா நிறுத்தப்பட்டது.இதையடுத்து அதிகாரிகளால் நடத்தப்பட்ட சமரசத்தைத் தொடர்ந்து 3 நாள்கள் மட்டும் திருவிழா நடத்த அனுமதி அளிக்கப்பட்து. இதனை ஏற்க மறுத்து தொடர்ந்த வழக்கில் 10 நாள்கள் திருவிழா நடத்தவும், குறிப்பிட்ட சமூகத்தவர் வசிக்கும் தெரு வழியாக கரகம் கொண்டு செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனவே, நிகழாண்டு பாதுகாப்புடன் திருவிழா நடத்த அனுமதி அளிக்க வேண்டுமென அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 262 மனுக்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன், சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் அ.பூங்கோதை, அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.