அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் புதன்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார்.
தஞ்சை மாவட்டம் பாபநாசம், மேல வீதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (55). தொழிலாளி. கடலூர் மாவட்டம் கொண்டாயிருப்பு கிராமத்தில் வசிக்கும் தனது மகள் வீட்டுக்கு வந்த இவர்,செவ்வாய்க்கிழமை காலை மீன்சுருட்டி கடைவீதிக்கு வந்துவிட்டு மீண்டும் தனது மகளின் வீட்டுக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
நெல்லித்தோப்பு கிராமம் அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில், பலத்த காயமடைந்த கோவிந்தராஜ் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார். புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.