அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றில் வெள்ளிக்கிழமை மாலை அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் சனிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டார்.
திருமானூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சுப்பிரமணி. இவர், வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் மனைவி நதியா, தனது மகன்கள் சந்துரு(7), சூர்யா(9) ஆகியோருடன் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் முண்டனார் கோயில் படித்துறை அருகே குளித்தபோது, சூர்யா ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த திருமானூர் போலீஸார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஆற்றில் இறங்கி தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. இதையடுத்து, அரியலூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு படையினர் இரவு 7 மணி வரை தேடியும் சிறுவன் கிடைக்காததால், பணியை நிறுத்திவிட்டுச் சென்றனர்.
இந்நிலையில், சனிக்கிழமை காலை மீண்டும் சிறுவனைத் தேடும் பணியைத் தொடங்கியது. சுமார் 1 மணிநேரத்துக்குப் பின்னர், சூர்யா குளித்த இடத்தில் இருந்து கிழக்குத் திசையில் சுமார் 25 மீட்டர் தூரத்தில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து, அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சடலம் அனுப்பிவைக்கப்பட்டது. திருமானூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.