அரியலூர் அருகேயுள்ள ஓட்டக்கோவில், பொய்யாத நல்லூர் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளத்தை சென்னை வேளாண் துணை இயக்குநர் பொன்மலர் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் தெரிவித்தாவது: அரியலூர் வட்டாரத்தில் மக்காச்சோளம் சுமார் 5,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. மக்காச்சோளம் தானியவகைப் பயிர்களில் முக்கியமான ஒன்றாகும். பல ஆண்டுகளாக மக்காச்சோளம் பயிரிடப்பட்டு வந்தாலும் இந்த ஆண்டில் குறிப்பாக தற்போது பயிரிடப்பட்டிருக்கும் மக்காச்சோளத்தில் குருத்து பூச்சி தாக்குதல் மற்ற மாவட்டங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.
இந்தப் பிரச்னையை போர்க்கால அடிப்படையில் சரி செய்வதற்கு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளான பறவை தாங்கி, சூரிய ஒளியில் செயல்படும் விளக்கு பொறி, இனக்கவர்ச்சி பொறி, மஞ்சள் நிற அட்டை ஒட்டுப்பொறி, மூட்டை அட்டை ஒட்டுண்ணி என்.பி.வி. வைரஸ் ஆகியவற்றை பயன்படுத்தி பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.மேலும் மக்காச்சோளத்துடன் வேலிமசால், மரவள்ளி அல்லது பீன்ஸ் போன்ற பயிர்களை ஊடுபயிராகப் பயிரிடலாம்.
மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள வட்டார வேளாண் அலுவலரை சந்தித்து ஆலோசனை பெற்று பயன்பெறலாம் என்றார் அவர்.ஆய்வின் போது, மாவட்ட வேளாண் துணை இயக்குநர் இரா.பழனிசாமி, வேளாண் உதவி இயக்குநர் விஜயலட்சுமி, வட்டார வேளாண் அலுவலர் சவிதா, துணை அலுவலர் செ.கந்தசாமி, கிரீடு வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப மேலாளர் ராஜா ஜோஸ்லின், உதவி வேளாண் அலுவலர் ம.இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.