அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே விழுப்பனாங்குறிச்சி கிராமத்தில் கடந்த 50 நாள்களுக்கு முன்பு பழுதான மின்மாற்றியை சரி செய்யப்படாததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருமானூர் அருகே விழுப்பனாங்குறிச்சி கிராமத்திலுள்ள மின்மாற்றி கடந்த 50 நாள்களுக்கு முன்பு பழுதாகிப் போனது. இதையடுத்து இந்த ஊருக்கு அருகிலுள்ள வடுகர்பாளையம் கிராமத்தில் இருந்து மின் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 3 நாள்களுக்கு முன்பு இந்த மின்மாற்றியும் பழுதானது.
இதனால் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வந்த விழுப்பனாங்குறிச்சி கிராம மக்கள், அப்பகுதி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மின்வாரியப் பொறியாளர்கள், உடனடியாக மின்மாற்றி சரி செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.