அரியலூர் மாவட்டத்தில் புதிய மீன் பண்ணை குளங்கள், குட்டைகள் அமைக்க 40 சதவீதம் மானியம் வழங்கப்படுவதாக ஆட்சியர் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு மீன்வளத் துறை மூலம் மத்திய அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி, மீன்வள மேலாண்மை மற்றும் நீலப் புரட்சி திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் நன்னீர் மீன்வளர்ப்பு, உவர்நீர் இறால் வளர்ப்பு மேற்கொள்ள ஏதுவாக கீழ்கண்ட திட்டங்களை செயல்படுத்தப்படவுள்ளது.
புதிய மீன்பண்ணைக் குளங்கள்,குட்டைகள் அமைத்தல் திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டேர் மீன்வளர்ப்பு குளம் அமைத்திட ஆகும் செலவினத் தொகை ரூ.7 லட்சத்தில் 40 சதவீத விழுக்காடு அதிகபட்சமாக ரூ.2.80 லட்சம் மானியத் தொகை வழங்கப்படும்.
ஏற்கெனவே உள்ள மீன்வளர்ப்பு குளங்கள், தொட்டிகள் சீரமைத்தல், புதுப்பித்தல் திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டேருக்கு ஆகும் செலவினத் தொகை ரூ.3.50 லட்சத்தில் 40 சதவீதம் மானியம் ரூ.1.40 லட்சம் வழங்கப்படும்
நன்னீர் மீன்வளர்ப்பு இடுபொருள் செலவினம் ஒரு ஹெக்டேர் மீன்வளர்ப்ப்ல்ற்கு இடுபொருட்களுக்கு ஆகும் செலவினத்தொகை ரூ.1.50 லட்சத்தில் 40 சதவீதம் மானியம் ரூ.60 ஆயிரம் வழங்கப்படும்.
பயனாளிகள் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ள விவசாயிகள் , மீன் வளர்ப்போர் ஒரு மாதத்திற்குக்குள் அரியலூர், மாவட்ட மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மீன்வளத் துறை அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.