ஜயங்கொண்டம் வட்டார வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் மாநில விரிவாக்கத் திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின்கீழ் (அட்மா) நுண்ணீர்ப் பாசனம் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கு பயிற்சி சூரியமணல் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேளாண் அலுவலர்களில் ராஜேந்திரன் தலைமை வகித்தார். சுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.
பயிற்சியில் வேளாண் அலுவலர் ராஜேந்திரன் பேசுகையில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக மகசூல் பெற உதவும் தொழில்நுட்பங்களான சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர்ப் பாசனம், மழைத் தூவான் அமைத்தல் போன்ற நுண்ணீர்ப்பாசன முறைகள் குறித்தும் சொட்டு நீர் உரப் பாசனம் குறித்தும் விளக்கினார்.
நாகார்ஜுனா நுண்ணீர்ப் பாசன நிறுவன அலுவலர் விக்னேஷ்வரன், வேளாண் உதவி அலுவலர் ஆனந்தி ஆகியோர் பேசினர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் மீனாட்சி வரவேற்றார். உதவி தொழில்நுட்ப மேலாளர் முருகன் உழவன் செயலி பதிவிறக்கம் குறித்து விளக்கினார். சூர்யமணல் கிராம விவசாயிகள், மற்றும் பண்ணை மகளிர் பயிற்சி பெற்றனர்.