மாசி மகத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டம், திருமானூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 14 பேர் காயமடைந்தனர்.
விழாவையொட்டி திருமானூர் கைலாசநாதர் கோயில் இருந்து திருவெங்கனூர் கிராமத்தினர் வாடிவாசலுக்கு சீர்வரிசை எடுத்து வந்தனர். அதன் பின் கோயில் காளைகள், பின்னர் திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், புதுக்கோட்டை,சேலம் மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 400-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சில காளைகள் களத்தில் நின்று விளையாட, சில சீறிப் பாய்ந்து சென்றன.
காளைகள் முட்டியதில் 14 பேர் காயமடைந்தனர். இவர்களில் பலத்த காயமடைந்த கோவிலூர் தமிழரசன் (25), மதுரை மாவட்டம் வாடிப்பட்டி விஜய் (24), அருங்கால் மணிகண்டன்(23),திருமானூர் மணிகண்டன் (23), திருமானூர் கீழவீதி மணிகண்டன் (40) ஆகிய 5 பேர் தீவிர சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மற்றவர்களுக்கு திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மற்றும் ஜல்லிக்கட்டு தளத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது.
காளைகளை அடக்கியோருக்கும், பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள், கட்டில்,சேர்,வேட்டி,சேலை,சைக்கிள் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.