தேசிய நெடுஞ்சாலை பணிக்கு அனுமதியின்றி ஏரியில் மண் எடுக்கப்படுவதாக கூறி, மேலப்பழுவூர் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரை அடுத்த மேலப்பழுவூரில் பாப்பான்குளம் ஏரி உள்ளது. இந்த ஏரியிலிருந்து கடந்த சில நாள்களாக திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை பணிக்கு மண் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஏரியில் மண் எடுக்க அனுமதிபெறவில்லை என்றும், அளவுக்கு அதிகமாக மண் எடுப்பதாகவும் கூறி கிராம மக்கள்
திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சென்ற அரியலூர் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், வட்டாட்சியர் கதிரவன் மற்றும் கீழப்பழூவூர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அனுமதியின்றி மண் அள்ளியதற்கு உரிய அபராதத் தொகை வசூலிக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.