அரியலூர் மாவட்டம் தென்னூரில் புதன்கிழமை(ஜூலை 31) முதல் தொழிற்கடன் வழங்கும் திட்ட முகாமில் பி.சி., எம்.பி.சி வகுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்கள் தொழிற்கடன், தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறுகடன், கறவை மாடு வாங்க கடனுதவி பெற விரும்புவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய, கல்வியில் சிறந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள் உயர் கல்வி பயில்வதற்கான கல்வி கடன் பெற விரும்புவர்கள் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டம் தென்னூர் கிராமத்திலுள்ள தென்னூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் புதன்கிழமை முதல் நடைபெறும் மேளாவில் விண்ணப்பங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து பயன்பெறலாம்.
ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டும் கடனுதவி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் அணுகவும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.