அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருமழபாடி அருள்மிகு சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமி திருக்கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியெம்பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், விபூதி, மாவுப்பொடி,திரவியப்பொடி, தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், பால் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து நந்தியெம்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தியெம்பெருமானை வழிபட்டனர். இதே போல், கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர், திருமானூர் அருகேயுள்ள கீழப்பழுவூர் அருள்மிகு அருந்தவநாயகி உடனாய ஆலந்துறையார், பெரியமறை வேதநாயகி உடனாய வேதபுரீஸ்வரர், காமரசவல்லி பாலாம்பிகை உடனாய கார்கோடேஸ்வரர், திருமானூர் காமாட்சியம்மன் உடனாய கைலாசநாதர், காரைப்பாக்கம் மாணிக்க வண்ணநாதர், செந்துறை பெரியநாயகி உடனாய சிவதாண்டேஸ்வரர் போன்ற சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அரியலூர், உடையார்பாளையம், ஜயங்கொண்டம், விக்ரமங்கலம், சுத்தமல்லி, பொன்பரப்பி, ஆண்டிமடம், மீன்சுருட்டி, தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சிவாலயங்களிலும் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.