தேர்தல் தொடர்பான புகார்களை விடியோ, புகைப்படத்துடன் தெரிவிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய செயலியில் தெரிவிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான மு.விஜயலட்சுமி.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த சாத்தமங்கலத்தில் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகனச் சோதனையை வியாழக்கிழமை ஆய்வு செய்த அவர் மேலும் தெரிவித்தாவது: சிதம்பரம் (தனி) மக்களவைத் தொகுதி பொதுத்தேர்தலுக்காக அரியலூர் மாவட்டத்திலுள்ள 2 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தொகுதிக்கு 3 வீதம் 6 பறக்கும் படைக்குழுக்களும், 6 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரம் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தை 04329 -228605, 228606, 228607 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். மேலும், 1800 425 2286 என்ற கட்டணமில்லை எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் புகைப்படம், விடியோவுடன் எளிதில் தெரிவித்திடும் வகையில் செயலியினை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் இந்த செயலியினை கூகுல் பிளே ஸ்டோர் களத்திலும் அல்லது தேர்தல் ஆணையம் இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து, பயன்படுத்தலாம். இந்தச் செயலியின் மூலம் பெறப்படும் புகார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவரங்கள் சம்மந்தப்பட்ட நபருக்கு குறுஞ்செய்தியாக அனுப்பிடும் வகையில் இந்த செயலி செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.