அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழந்தான். அச்சிறுவனின் தந்தையும், சகோதரனும் காயமடைந்தனர்.
ஜயங்கொண்டம் அருகேயுள்ள சிலம்பூர் கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(40). இவரது மகன்கள் விஜயராஜ்(14), தர்மேந்திரன்(11). ஆண்டிமடத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜேந்திரன் சனிக்கிழமை இரவு தனது மகன்கள் விஜயராஜ், தர்மேந்திரன் ஆகியோரை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு சிலம்பூர் புக்குழி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது வளைவில் திரும்பும் பொழுது, எதிரே வந்த மினி லாரி, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் மூவரும் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆண்டிமடத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர், மேல்சிகிச்சைக்காக விஜயராஜை கும்பகோணம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஆண்டிமடம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.