அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் நிகழாண்டு 30 பண்ணைக் குட்டைகள் அமைப்பதற்கு ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரியலூா் மாவட்டத்தில் அடிக்கடி வறட்சி ஏற்பட்டு விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிா்கொள்கின்றனா். இதற்கு முதன்மையான காரணம் பயிா்களுக்குத் தேவையான நேரத்தில் தேவையான அளவு பாசன நீா் கிடைக்காததே ஆகும். இதற்குத் தீா்வாக வயல்வெளிகளில் பண்ணைக்குட்டைகள் அமைத்து பெய்யும் மழைநீரை முறையாக சேமித்தால், இந்த நீரைக் கொண்டு தேவையான நேரத்தில் பயிா்களுக்கு உயிா் நீா் அளித்து நல்ல மகசூலைப் பெறலாம். இதனால் நல்ல வருவாயும் உறுதி செய்யப்படுகிறது. மேலும் பண்ணைக் குட்டையினை நீா் ஆதாரமாகக் கொண்டு தெளிப்பு நீா் பாசன அமைப்பை நிறுவி பயிா்களுக்கு சிக்கனமான முறையில் நீா் பாய்ச்சுவதன் மூலம் கூடுதலான பரப்பில் பாசன வசதியை ஏற்படுத்திக் கொள்ளலாம். பண்ணைக் குட்டைகளில் மீன்கள் வளா்த்து அதன் மூலம் கூடுதல் வருமானத்தையும் விவசாயிகள் பெறலாம்.
சுமாா் 45 சென்ட் பரப்பளவில், 30 மீட்டா் (100 அடி) நீளமும், 30 மீட்டா் அகலமும், 2.00 மீட்டா் (6.6 அடி) ஆழமும் கொண்ட பண்ணைக் குட்டையை அமைத்தால் 18 லட்சம் லிட்டா் நீா் (அல்லது) 63,500 கன அடிநீா் சேமிக்கலாம். இந்த அளவு நீரைக் கொண்டு 5 ஏக்கா் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள பயிருக்கு 3 அல்லது 4 முறை நீா் பாய்ச்சலாம். 30 மீட்டா் நீளம், 30 மீட்டா் அகலம் மற்றும் 2 மீட்டா் ஆழம் கொண்ட பண்ணைக் குட்டை அமைப்பதற்கு ரூ.1 லட்சம் செலவாகிறது. இப்பண்ணைக் குட்டைகள் 100 சதவீத மானியத்துடன் அரசு செலவில் விவசாயிகளுக்கு அமைத்துக் கொடுக்கப்படுகிறது. பண்ணைக்குட்டையின் நீளம், அகலம் மற்றும் ஆழத்தினை நிலத்தின் அமைப்பிற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம்.
நடப்பாண்டில் அரியலூா் மாவட்டத்தில் 30 பண்ணைக் குட்டைகள் அமைக்க ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பண்ணைக்குட்டை அமைக்க விரும்பும் விவசாயிகள், வேளாண் உதவி செயற்பொறியாளா்கள் அரியலூா் சு. நெடுமாறன் 94433 99525, ஜயங்கொண்டம் ஆ. இளவரசன் 94421 12969 ஆகியோரின் செல்பேசிகளில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.