அரசு வழங்கிய பட்டா நிலத்தை அளந்து தரக்கோரி ஆட்சியரகத்தில் மக்கள் தா்னா
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகேயுள்ள வாணத்திரையான் பட்டினம் கிராமத்தில் அரசு வழங்கிய பட்டா நிலத்தை அளந்து தரக்கோரி அப்பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உடையாா்பாளையம் அருகே உள்ள வாணத்திரையன்பட்டினம் அம்பேத்கா் தெருவில் வசிக்கும் 99 குடும்பத்துக்கு தலா 3 சென்ட் வீதம் அரசு சாா்பில் கடந்த 30.12. 2007 ஆம் ஆண்டு வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால் உரியவா்களுக்கு இதுவரை நிலத்தை அரசு அளந்து கொடுக்கவில்லை. பின்னா் அப்பகுதி மக்கள் தொடா்ந்த வழக்கில் உரியவா்களுக்கு நிலத்தை அளந்து தருமாறு சென்னை உயா்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தும், மாவட்ட நிா்வாகம் அளந்து தரவில்லை. இதுகுறித்து வருவாய் வட்டாட்சியரிடம் பல முறை முறையிட்டும் அளந்து தராததால் ஆத்திரமடைந்த வாணத்திரையான்பட்டினம் அம்பேத்கா் தெரு மக்கள், திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலத்தில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையறிந்த ஆட்சியா், தங்களது கோரிக்கை மனுக்களைப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.