அரியலூர் மாவட்டம் திருமானூர் காமாட்சி அம்மன் உடனாய கைலாசநாதர் திருக்கோயிலில் ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு முத்துப் பல்லக்கில் சுவாமிகள் ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
மின் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், சந்திரசேகர சுவாமி மற்றும் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
பல்லக்கு நான்கு ராஜ வீதிகளிலும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பக்தர்கள் வீடுகள்தோறும் தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.
இந்தப் பெருவிழாவில் அரியலூர் பெரிய அரண்மனை சமஸ்தானம் ஆதீன பரம்பரை தருமகர்த்தா ஸ்ரீமத் கே.ஆர். துரை மற்றும் கோயில் நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள், பக்தர்கள், பிரதோஷ வழிபாட்டுக் குழுவினர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.