துபையிலிருந்து திருச்சி திரும்பிய அரியலூர் இளைஞர் கடத்தல்
துபையிலிருந்து திருச்சி திரும்பிய அரியலூர் இளைஞரை காரில் கடத்திச் சென்ற சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், பெரியகுறிச்சி பகுதியைச் சேர்ந்த சின்னதம்பி மகன் கொளஞ்சிநாதன்(33). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக துபையில் வேலை பார்த்துவருகிறார். விடுமுறை காரணமாக செவ்வாய்க்கிழமை அதிகாலை விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். விமானநிலைய நடைமுறைகள் முடிந்து, வெளியே வந்தபோது அங்கு காத்திருந்த திருச்சி வரகனேரி வாஹித், கொளஞ்சிநாதனிடம் அவரது உறவினர் கொடுத்தனுப்பிய நகைகள் குறித்து கேட்டதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, கொளஞ்சிநாதனை வாஹித் தரப்பினர் காரில் கடத்திச் சென்றனர்.
இதைக் கண்ட கொளஞ்சிநாதனின் தந்தை சின்னதம்பி, விமானநிலைய போலீஸில் புகார் அளித்தார். கொளஞ்சிநாதன் பாலக்கரை பகுதியில் உள்ள வாஹித் வீட்டில் இருப்பதைக் கண்டறிந்த தனிப்படை போலீஸார் அவரை மீட்டனர்.
துபையிலிருந்து திருச்சிக்கு புறப்படும்போது வாஹித் உறவினர் 5 பவுன் நகை கொடுத்து அனுப்பினராம். திருச்சி விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து நகையை விமானத்திலேயே வைத்துவிட்டு வந்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கடத்தியது தெரியவந்தது. விமான நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து கடத்தலில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகின்றனர்.