அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி வன்முறை சம்பவம் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது என்றார் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான ஜெயகுமார்.
இதுகுறித்து அரியலூரில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி: ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னணி அமைப்பினரும், பாஜக,பாமக போன்ற கட்சிகளும் ஜாதி,மதக் கலவரத்தைத் தூண்டி அரசியல் செய்ய பார்க்கிறார்கள். பாமகவினர் அதிகமாக உள்ள பகுதிகளில் மட்டும் இது போன்ற வன்முறைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக அவர்கள் தலித் மக்கள் மீது தான் அதிக வன்முறையில் ஈடுபடுகின்றனர்.வன்முறையில் ஈடுபட்ட அனைவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொன்பரப்பியில் மறு வாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்று தொல். திருமாவளவன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால் எங்களது கட்சி அதற்கு ஆதரவு தெரிவிக்கும் என்றார் அவர். அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன், செய்தித் தொடர்பாளர் மா.பொ. சிவகுமார்,நிர்வாகி ரவிந்திரபோஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.