அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே அண்ணனை குத்திக் கொன்ற தம்பி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருமானூர் அருகேயுள்ள திருவெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உத்திராபதி மகன்கள் சுபாஷ் (28), சுரேஷ் (26). இருவரும் வாடகை லாரி தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வரவு செலவு கணக்கு தொடர்பாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுரேஷ்,தனது அண்ணன் சுபாஷை கத்திரிக்கோலால் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சுபாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த திருமானூர் போலீஸார் சடலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர்களின் தாய் ஜெயலலிதா அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து சுரேஷை கைது செய்தனர்.