நுண்ணூட்டக்கலவை மற்றும் உயிர் உரங்கள் போன்ற இடுபொருள்களை வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைத்து விநியோகிக்க வேண்டும் என்று வேளாண் இணை இயக்குநர் வ. கிருஷ்ணமுர்த்தி தெரிவித்தார்.
மேட்டூர் அணை திறக்கப்பட்டதையடுத்து அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார வேளாண் அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் கீழப்பழுவூர் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்கம் மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், திறக்கப்பட்டுள்ள நீரை முறையாகப் பயன்படுத்த வேளாண் கருவிகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மண் வளம் பாதுகாத்து உயர் மகசூல் பெற பசுந்தாள் உரம் பயிரிட விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். முக்கிய இடுபொருளான விதைகள் குறிப்பாக நீண்ட கால ரகங்களான சி.ஆர் 1009 சப்-1, சி.ஆர்1009 ஆகியவை போதிய அளவிலும் , மத்திய கால ரகமான கோ.ஆர்.50 போதியளவிலும் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைத்து , மானிய விலையில் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வழி செய்திட வேண்டும்.
நுண்ணூட்டக் கலவை மற்றும் உயிர் உரங்கள் போன்ற இடுபொருட்களை வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைத்து விநியோகிக்க வேண்டும்.
யூரியா, டி.ஏ.பி, பொட்டாசியம் போன்ற உரங்களை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் தனியார் கடைகளில் உரிய இருப்பு உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும் . உரிய இடங்களில் நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ள வேண்டும், திருந்திய நெல் சாகுபடி, இயந்திர நடவுக்கான நாற்றாங்கால் தயாரிக்க விவசாயிகளுக்கு அறிவுரை வழங்க அலுவலர்களை வலியுறுத்தினார்.
கூட்டத்தில் வேளாண் உதவி இயக்குநர்,அனைத்து வட்டார வேளாண் உதவி அலுவலர்கள்,வேளாண் அலுவலர்கள்,உதவி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.