திருமானூர் அருகிலுள்ள விழுப்பனங்குறிச்சி புனித சவேரியார் ஆலய பெருவிழாவையொட்டி, புதிய சப்பரம் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
விழுப்பனங்குறிச்சில் புனித சவேரியார், புனித வனத்து சின்னப்பர் மற்றும் புனித ரெமிஜியூஸ் ஆலய ஆண்டுப் பெருவிழா ஆக. 27- ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி கிராம மக்களால் புதிய சப்பரம் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து புதிய சப்பரத்தின் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஏலாக்குறிச்சி உதவி பங்குத்தந்தை ஆல்வின் தலைமையில், கிராம மக்கள் முன்னிலையில் புதிய சப்பரம் மந்திரிக்கப்பட்டு, முன்னாள் ஊராட்சித் தலைவர் மாலதி கருப்பையா வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கிராமமக்கள் சப்பரத்தை பிடித்து இழுத்து ஊரைச் சுற்றி வலம் வந்தனர்.
தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல், புனித வனத்து சின்னப்பர் ஆலயத்தில் ஏலாக்குறிச்சி பங்குத் தந்தை சுவக்கின் தலைமையில், உதவி பங்குத் தந்தை ஆல்வின் முன்னிலையில் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், நாட்டாமைகள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.