அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 322 மனுக்கள் அளிக்கப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) நா.சத்தியநாராயணன் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, முதியோர் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, தொகுப்பு வீடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அளித்த 322 மனுக்களைப் பெற்றுக் கொண்டார். இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் தா.பரிதாபானு, ஜெ.பாலாஜி, சமூகப் பாதுகாப்புத் திட்டத் துணை ஆட்சியர் அ.பூங்கோதை உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.