அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கீழப்பழுவூர் அருகேயுள்ள மலத்தான்குளம் கிராமத்தில் உள்ள காலனித்தெருவில், சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி சார்பில், மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த ஒருவாரமாக இப்பகுதி மக்களுக்கு சரிவர குடிநீர் விநியோகிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இது குறித்து, ஊராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள்,அவ்வழியே வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த கீழப்பழுவூர் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.