அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கீழக்கொளத்தூரில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி மறுக்கப்பட்டதால், தெருக்களில் கருப்புக்கொடி ஏற்றிகிராம மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
திருமானூர் அருகிலுள்ள கீழக்குளத்தூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வருவாய், காவல்துறையினரிடம் விழாக் குழுவினர் அனுமதிக் கோரினர்.
வழக்கமாக நடைபெறும் இடத்தில் ஜல்லிக்கட்டு நடத்த போதிய வசதியில்லை. எனவே, குடியிருப்புகள் இல்லாத இடத்தில், ஜல்லிக்கட்டு நடத்த மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் கூறினார்களாம். இதனால் வழக்கமாக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் வாடிவாசல் அமைக்கும் பணி பாதியில் தடுத்து நிறுத்தப்பட்டது.
ஆனால் சுமார் 60 ஆண்டுகாலமாக நடத்தி வந்த இடத்திலேயே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளிக்க வேண்டும் எனக்கோரி, கிராமத்தில் அனைத்துத் தெருக்களிலும் கருப்புக் கொடிகளை ஏற்றி கிராம மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். மேலும், கிராமத்தில் பாதுகாப்பு கருதி காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.