அரியலூரில் 19-இல் புத்தகத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, ஜயங்கொண்டத்தில் தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பு சார்பில் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய பேரணியை உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலர் மணிவண்ணன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். பிரபஞ்ச தெய்வீக பேராற்றல் பவுண்டேஷன் தலைவர் முத்துக்குமரன் தலைமை வகித்தார்.
தமிழ் பண்பாட்டு பேரமைப்பு தலைவர் சீனி. பாலகிருஷ்ணன், பள்ளி தலைமையாசிரியர் ராஜப்ரியன், உலகத் திருக்குறள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் புத்தக வாசிப்பு பற்றிய குறிப்புகள் அடங்கிய விளம்பரப் பதாகைகளை கையில் ஏந்திச் சென்று, முழக்கமிட்டனர்.
பேரணியானது கடைவீதி, அண்ணா சாலை, நான்கு சாலை சந்திப்பு வழியாக சென்று அன்னை தெரசா மெட்ரிக். பள்ளியில் நிறைவடைந்தது.