அரியலூர் மாவட்டம், திருமானூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறையின் சார்பில் மாணவ, மாணவிகளிடையே வாசிப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
மாவட்ட நூலக ஆணைக்குழு மற்றும் திருமானூர் முழு நேர கிளை நூலகம் இணைந்து நடைபெற்ற நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.புகழேந்தி தலைமை வகித்து தொடக்கி வைத்தார். மாவட்ட நூலக அலுவலர் சண்முகநாதன், சமூக ஆர்வலர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், புத்தகங்களை வாசித்த மாணவர்களிடையே கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளியில் 10, பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் இன்பராணி வரவேற்றார்.