அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே சாலை விபத்தில் காயமடைந்தவர், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
விக்கிரமங்கலம் அருகேயுள்ள சுந்தரேசபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சின்னையன் மகன் நடேசன் (36). கடந்த 10 ஆம் தேதி இவர், தனது மனைவி பூங்காவனத்தை (33) அழைத்துக்கொண்டு அரியலூரில் வசிக்கும் மாமியார் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது விவசாயி ஒருவர் சாலையில் காயவைத்திருந்த எள்ளுகாய் மீது இரு சக்கர வாகனம் சென்ற போது,நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தனர்.
அவர்களை அக்கம்பக்கதினர் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நடேசன், அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.