தமிழ் மொழி கல்வியை கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ் வழிக் கல்வி இயக்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், 2010 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் வழங்கப்படும் 20 சதவீத இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். மழலையர் கல்வியில் தாய்மொழி தமிழை கட்டாயமாக்கி ஆங்கில மொழியைத் தடை செய்ய வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் தரமான கல்வியும், அடிப்படை வசதிகளும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அரசு ஊதியம் பெறுவோரின் குழந்தைகளை கட்டாயம் அரசுப் பள்ளியில் சேர்க்க ஆணையிட வேண்டும். பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழப் பேரரசுக் கட்சியின் மாவட்டச் செயலர் கு.குடிமன்னன் தலைமை வகித்தார். கவிஞர் அறிவுமழை தொடக்க உரையாற்றினார். தமிழ் தேசிய முன்னணி நிர்வாகிகள் கா.தமிழ்வேங்கை, அரங்கநாடன், தமிழ் களம் இளவரசன், தமிழ் கல்வி இயக்க நிர்வாகி சின்னபத் தமிழர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.