அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தைச் சேர்ந்த திமுக முன்னாள் எம்.பி. சிவசுப்பிரமணியன் (81) உடல் நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலமானார்.
ஆண்டிடம் தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். எம்.ஏ.,பிஎல்., படித்துள்ள இவர் ஆண்டிமடத்தில் வசித்து வந்தார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமானவர். பெரம்பலூர் மாவட்ட திமுக செயலராகவும், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட துணைச் செயலராகவும் இருந்தார்.
1971-1976 மற்றும் 1986-1990 ஆம் ஆண்டுகளில் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகவும்,1989-1991-இல் ஆண்டிமடம் எம்எல்ஏவாகவும்,1998-2004 ஆண்டுகளில் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.
அரியலூர் மாவட்டம் உருவாகக் காரணமாக இருந்த இவர், கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அரியலூர் தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.
இதையடுத்து, இறந்தவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஆண்டிமடத்திலுள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து திமுக நிர்வாகிகள்,பொதுமக்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இவரது
உடல் சனிக்கிழமை (ஜூன் 15) அடக்கம் செய்யப்படுகிறது.
இவருக்கு சிவராஜேஸ்வரி என்ற மனைவியும், சிவசங்கர், சிவக்குமார் ஆகிய மகன்களும் உள்ளனர். இவர்களில் சிவசங்கர் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். தற்போது அரியலூர் மாவட்ட திமுக செயலர். சிவக்குமார் தொழில் செய்கிறார்.