ரூ.14 கோடியிலான திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை
அரியலூர் மாவட்டத்தில் ரூ. 14 கோடியிலான திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் விளாங்குடி ஓடையின் குறுக்கே ரூ.1.50 கோடியில் பாலம் கட்டும் பணியை அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் தொடக்கி வைத்தார்.
அப்போது அவர் தெரிவித்தது:
விளாங்குடி ஓடையின் குறுக்கே ரு.1கோடியே 50 லட்சம் மதிப்பில் பாலம் கட்டும் பணியானது, மாவட்ட கனிம நிதியுதவி மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. இப்பாலம் 30.40 மீட்டர் நீளம், 7.50 மீட்டர் அகலம் அளவுகள் மற்றும் அணுகுசாலையும் கட்டப்படவுள்ளது.
இதேபோல சுண்டக்குடி கிராமத்தில் ஆண்டிப்பட்டாக்காடு மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை, செந்துறை மணக்குடையான் கிராமத்தில் அருகில் ஆணைவாரி ஓடையில் குறுக்கே தடுப்பணை,ரெட்டிப்பாளையம் உப்போடையின் குறுக்கே தடுப்பணை, கல்லங்குறிச்சியிலுள்ள கல்லார் ஓடையின் குறுக்கே தடுப்பணை, கருப்பிளாக்கட்டளை அருங்கால் ஓடையின் குறுக்கே தடுப்பணை, ஆலத்தியூர் கிராமத்தில் வெள்ளாறு குறுக்கே தடுப்பணை ஆகிய பணிகளும், ரெட்டிபாளையம் கிராமத்திலுள்ள உப்போடை, புது ஏரி மற்றும் அதன் கீழ் உள்ள ஏரிகள், ஒட்டக்கோவில் முதல் புதுபாளையம் கிராமம் வரை உள்ள கல்லார் ஓடை, செந்துறை பெரிய ஏரி,கல்லங்குறிச்சி கிராமத்திலுள்ள கிருஷ்ணபடையாட்சி ஏரி, செட்டிதிருக்கோணம் கிராமத்திலுள்ள சியாண்டி ஏரி,நெறிஞ்சிக்கோரை ஈஸ்வரன் கோயில் ஏரி,கருப்பிளாக்கட்டளை உடையான் ஏரி உள்ளிட்ட புனரமைப்பு பணிகள் மாவட்ட கனிம அறக்கட்டளை நிதியுதவி மூலம் பணிகள் செயல்படுத்தப்படவுள்ளன என்றார் அவர்.
பூமிபூஜைக்கு மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி தலைமை வகித்தார். ஜயங்கொண்டம் எம்.எல்.ஏ.ஜெ.கே.என். ராமஜெயலிங்கம், மருதையாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரம்) தட்சிணாமூர்த்தி, பொறியாளர் வேல்முருகன் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.