ஜயங்கொண்டம் அருகே உரிமத்துடன் வைத்திருந்த துப்பாக்கியைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஜயங்கொண்டம் அருகிலுள்ள கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் தங்கராசு (80) .இவர் அரசு உரிமத்துடன் துப்பாக்கி பயன்படுத்தி வந்தார். கடந்த 2016 பேரவைத் தேர்தலின் போது, துப்பாக்கியை ஒப்படைத்து, 2017, ஏப்.24 ஆம் தேதி பெற்றுச் சென்றார். மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், துப்பாக்கியை ஒப்படைக்குமாறு போலீஸார் கோரினர்.
துப்பாக்கி துருப்பிடித்து விடும் என சாக்கில் சுற்றி, விறகு பக்கத்தில் வைத்திருந்ததாகவும்,அதுதற்போது காணவில்லை எனவும்,கண்டுபிடித்து தருமாறு ஜயங்கொண்டம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்தார். இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளர் வசந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.