அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே இடத் தகராறில் தம்பியைக் கொன்ற அண்ணன் உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர்.
திருமானூர் அருகேயுள்ள கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு மகன்கள் ராஜேந்திரன் (50), ரவி (48). அருகருகே வசிக்கும் இரு குடும்பத்தினருக்கும் இடையே சில ஆண்டுகளாகவே இடப்பிரச்னையால் தகராறு இருந்தது.
இதற்கிடையே, ரவிக்குச் சொந்தமான தென்னை மரத்தின் மட்டை ராஜேந்திரன் வீட்டில் உரசி வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை மாலை வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் அரிவாளால் ரவியை வெட்டிவிட்டு தப்பிவிட்டார்.
அருகில் இருந்தோர் ரவியை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அன்று நள்ளிரவு ரவி உயிரிழந்தார். திருமானூர் போலீஸார் ராஜேந்திரன், அவரது மகன் வினோத்குமார்(25) ஆகியோரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.