கமலின் மக்கள் நீதி மய்யத்தை தடைசெய்ய வேண்டுமென இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டத்தில் இந்து முன்னணியின் மாவட்ட பொறுப்பாளர்கள் சந்திப்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், கடந்த 12 ஆம் தேதி அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவன தலைவர் நடிகர் கமல்ஹாசன், இந்து மதத்தை அவதூறாகப் பேசியதைக் கண்டிப்பதுடன், தமிழகத்தில் மதக் கலவரத்தை தூண்டுவதற்கு முயற்சி செய்யும் கமல்ஹாசனைக் கைது செய்ய வேண்டும். அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்துக்கு, இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட துணை தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் ரமேஷ், மாவட்ட செயலர் திருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் ராமபாலமுருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சபரிராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.