அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் நகராட்சி பேருந்து நிலையத்தில் மேற்கூரை சிமென்ட் பூச்சு ஞாயிற்றுக்கிழமை பெயர்ந்து விழுந்தது. இதில், டீக்கடையில் வேலை செய்யும் மாஸ்டர் படுகாயமடைந்தார்.
ஜயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் நகராட்சியால் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
இதில், திருச்சி செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்திலுள்ள முதல் கடையில் டீ கடை ஒன்று உள்ளது. இந்த டீ கடையில் எப்பொழுதும் பயணிகள் அதிகமாக இருப்பதால் கடை பரபரப்பாகவே காணப்படும்.
இந்தக் கடையில் மாஸ்டராக கடாரங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த குருநாதன்(39) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் கடைக்கு தேவையான வடை, பஜ்ஜி உள்ளிட்ட பலகாரங்களை தயார் செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக கடையின் மேற்கூரை சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன.
இதில் காயமடைந்த குருநாதன், ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
பயணிகள் யாரும் கடையின் உள்ளே இல்லாததால் பெரிய அசம்பாவிதம் ஏதுமில்லை.
இதுபோன்ற அசம்பாவிதங்கள் மேலும் ஏற்படாமலிருக்க பழைய கடைகளை இடித்துவிட்டு புதிய கடைகளை கட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.