அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் வாரச்சந்தையில் கார்பைடு கல் பயன்படுத்தி பழுக்க வைத்த மாம்பழங்கள், சாயம் கலந்த பட்டாணிகளை உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
ஜயங்கொண்டத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை அன்று வாரச்சந்தை நடைபெறும். இந்நிலையில், உணவுப் பாதுகாப்பு துறை அலுவலர் சசிகுமார் தலைமையில், ஜயங்கொண்டம் நகராட்சி துப்புறவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், தூய்மை இந்தியா திட்ட பரப்புரை மேற்பார்வையாளர் இந்துமதி உள்ளிட்டோர் திடீரென வாரச்சந்தையில் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.
அப்போது, கார்பைடு கல் பயன்படுத்தி பழுக்கவைத்த மாம்பழங்கள், சாயம் கலந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பட்டாணிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப், பைகளையும் பறிமுதல் செய்து, அவற்றை வைத்திருந்த வியாபாரிகளுக்கு அபராதமும் விதித்தனர்.