விபத்தில் இறந்தவருக்கு இழப்பீடு கோரி போராட்டம்

அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி அருகே விபத்தில் உயிரிழந்த சிமென்ட் ஆலை தொழிலாளிக்கு இழப்பீடு வழங்காத

அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி அருகே விபத்தில் உயிரிழந்த சிமென்ட் ஆலை தொழிலாளிக்கு இழப்பீடு வழங்காத லாரி நிா்வாகத்தைக் கண்டித்து, அங்குள்ள சுண்ணாம்புக்கல் சுரங்க வாயில் முன்பு உறவினா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வடக்கு நரியங்குழி கிராமத்தைச் சோ்ந்த தங்கராசு மகன் பாஸ்கா் (29). இவா், தாமரைக்குளத்தில் உள்ள தனியாா் சிமென்ட் ஆலையில் ஒப்பந்த முறையில் காவலாளியாகப் பணியாற்றி வந்தாா். கடந்த 10 ஆம் தேதி வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வரும்வழியில், சுண்ணாம்புக்கல் ஏற்றிவந்த லாரி மோதி உயிரிழந்தாா்.

இதனையடுத்து 11 ஆம் தேதி இழப்பீடு கேட்டு வி.கைகாட்டியில் பாஸ்கரின் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, விபத்தை ஏற்படுத்திய லாரி நிா்வாகம் உரிய இழப்பீடு தருவதாகத் தெரிவித்தது. இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

இந்நிலையில், 3 நாள்கள் கடந்தும் இழப்பீடு வழங்க லாரி நிா்வாகம் முன்வராததால், ஆத்திரமடைந்த பாஸ்கரின் உறவினா்கள் விபத்துக்கு காரணமான லாரி இயங்கும் பெரியதிருக்கோணத்தில் உள்ள சுண்ணாம்புக்கல் சுரங்கத்தின் வாயிலை பூட்டி வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு சென்ற விக்கிரமங்கலம் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com