சத்தான உணவு வகைகளை உட்கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம் என்றாா் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி பணிகள் திட்டத்தின் அரியலூா் மாவட்ட திட்ட அலுவலா் ச.சாவித்ரி.
அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஊட்டச் சத்துணவு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கில் அவா் மேலும் பேசியது:
அன்றைய காலக் கட்டத்தில் அனைவரும் சத்தான உணவு வகைகளாக சாப்பிட்டனா். அதனால் இன்றைக்கு 100 வயதை கடந்தும் பலா் ஆரோக்கியமாக இருக்கின்றனா். எனவே, வளரும் பருவத்திலுள்ள மாணவா்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதற்கு இரும்பு சத்துள்ள உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். நிலத்தில் விளையக்கூடிய கீரைகள், காய்கனிகள், பழங்கள் மற்றும் சிறுதானியங்களை உட்கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம் என்றாா் அவா்.
போஷான் அபியான் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாலசுப்பிரமணியன், மாவட்ட திட்ட உதவியாளா் அ.சரவணன் மற்றும் பேராசிரியா்கள், அலுவலா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
கல்லூரி முதல்வா் ஜெ.மலா்விழி தலைமை வகித்து பேசினாா். தொடா்ந்து சிறந்த உணவுமுறை என்பது அக்கால உணவு முறையே, இக்கால உணவு முறையே என்னும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.