அரியலூா் மாவட்டத்தில் உரிமம் பெறாமல் உரங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடை உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வேளாண் மைய அலுவலகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்த செய்தி குறிப்பு:
அரியலூா் மாவட்டத்தில் ராபி பயிா் மற்றும் சம்பா சாகுபடிக்கு போதிய அளவு உரம் மாவட்டம் முழுவதும் இருப்பு வைக்கப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கப்படுகிறது.
கடந்த 5 மாதங்களில் 85 உர மாதிரிகள் எடுக்கப்பட்டு அதில் 7 உர மாதிரிகள் தரமற்றவையாகக் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
உர விற்பனையாளா்கள் உரிமம் பெறாமல் உரங்கள் விற்பது, உரிமம் இல்லாத குடோன்களில் உரங்கள் இருப்பு வைப்பது, நிா்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிக விலைக்கு விற்பது, ரசீதை விவசாயிகளுக்கு வழங்காமல் இருப்பது, பதிவேடுகள், விற்பனை முனைய கருவியின் இருப்புகள் ஆகியவற்றை சரிவர பராமரிக்காமல் இருப்பது, விலை பட்டியல் பலகை வைக்காமல் இருப்பது ஆகியவை உர தரக் கட்டுபாட்டு சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றங்களாகும்.இத்தகைய செயல்களில் ஈடுபடுவோரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் விற்பனை உரிமமும் ரத்து செய்யப்படும்.
மேலும் விவசாயிகள் தங்களுடைய ஆதாா் எண்ணை பயன்படுத்தி அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் விற்பனை முனைய கருவியின் மூலம் பில்லுடன் உரங்களை வாங்க வேண்டும்.